நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
.
.
காதலுக்காய் அலைந்து திரிந்து
யாரையோ காதலிப்பதாய் நினைத்து உருகி
யாரிடமோ காதலைச் சொல்லி
யாரையோ கல்யாணம் பண்ணி வாழ்ந்து
சாகாமல் வாழ்வது எப்படி
செத்துக் கொண்டிருந்தாலும்
சிரிப்பது எப்படி என்று
சிலரிடம் கற்றுக் கொள்ளவேண்டும்...
வாழ்க்கையின் ரணங்களைத் தாங்கியும்
தாங்க முடியாமல் வெடித்து அழுது
வெளியே ஒன்றுமே நடக்காதது போல்
பாவனை செய்யும் எத்தனை பேர்...
.
அவர்களுக்காக ஒரு நிமிடம்...
சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
பாதகமாக இருந்தாலும்
பிடிக்காததையே பிடித்ததுபோல்
மற்றவருக்காக சிரித்தாலும்
கண்ணுக்குள்ளேயே அமுங்கும் கண்ணீர் கொப்பளிக்கக் கூட முடியாமல் திணறி அடுப்பங்கரை கழிப்பிடங்களில்
அழுதாவது தீர்க்க முடிகிறதே-
துயரம் நெஞ்சை அடைக்க
ஒரு வடிகாலாய் மிஞ்சுவது கண்ணீராயினும் அதுவே மனசை லேசாக்க... .
.
இவர்களுக்காய் ஒரு வாழ்க்கை
வெளியேஒரு வாழ்க்கை உள்ளே மனதில்
இப்படி இரண்டு பட்ட செயல்களால்
செய்வதறியாமல் போனாலும்
சம்பிரதாயமோ ஏதோ ஒன்று உந்தித் தள்ள
சாவதற்கும் துணிவில்லாமல்
வாழ்வதற்கும் வழி தெரியாமல்
தவிக்கும் நெஞ்சங்களுக்கு
ஒரு மயில் பீலி கொண்டு வருடினாலும்
வலிக்குமோ என்னவோ...
இவர்களுக்கும் விடிவு காலம் தெரியட்டும்
ஆசைக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கட்டும்... .
.
உறவோடு ஒட்டி வாழ முடியாதவர்கள்
ஆனாலும் உறவை விட்டு விலகாதவர்கள்
உறவுக்காகத் தன் உணர்வுகளை எரிப்பவர்கள்
உறவுக்காகவே உயிரை விடுபவர்கள்
மனம் ஒன்று நினைக்க வாய் ஒன்று பேச
நினைப்பதெல்லாம் பேச முடியுமா என்று
தத்தளித்தும் எதிர் நீச்சல் போடும் உத்தமர்கள்
இந்தப் பாடு படத்தான் வேண்டுமா என்றால்
எந்தப் பாடு பட்டாலும் குடும்பம் குட்டிக்காக
எதையும் தாங்கும் இதயம் இருப்பதாக
காட்டிக் கொள்கிறார்கள் பல பேர்
நிம்மதியும் சந்தோஷமும் சிறிது நிற்கட்டும் இவர்களிடம்...

No comments:
Post a Comment